Tuesday, April 8, 2014

இன்றுடன் முடிகிறது விண்டோஸ் XP:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், மிகப் பிரபலமான விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வாழ்நாள் இன்றுடன் (ஏப்ரல் 8) அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த சிஸ்டம் இனி கம்ப்யூட்டர்களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், இன்னும் உலக அளவில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சிஸ்டம் தான், இன்னும் 50% கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய இலக்கு விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான்.

இந்த ஏப்ரல் 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு விண்டோஸ் எக்ஸ்பி வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் கம்ப்யூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். இந்த நாளுக்குப் பின்னர், குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் பேட்ச் பைல்கள் கிடைக்காது.

ஏன் எக்ஸ்பி கைவிடப்படுகிறது? மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக எக்ஸ்பி உருவெடுத்தது. இதனை அடுத்து வெளியான விஸ்டா, பரிதாபமாக 4% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது எக்ஸ்பி.
இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற மைக்ரோசாப்ட், விஸ்டாவிற்கு வரவேற்பு கிடைக்காததால், எக்ஸ்பியைக் கைவிட திட்டமிட்டது.

பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான சப்போர்ட் பைல்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. விண்டோஸ் 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான பைல்களை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக சப்போர்ட் தருவதை நிறுத்துகிறது.

அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயங்கும். மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தினை, ஏப்ரல் 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது, தானாக எந்த கம்ப்யூட்டரும் பாதுகாப்பு தரும் பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடாது. ஆனால், மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஹேக்கர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான பைல்களை வழங்கும்.
சென்ற வாரம், விண்டோஸ் எக்ஸ்பி பாதுகாப்பிற்கான திட்டங்களுக்கான அப்டேட் பைல்கள் வரும் ஜூலை 14,2015 வரை, அதாவது மேலும் 15 மாதங்களுக்கு வழங்கபப்டும் என அறிவித்துள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பாதுகாப்பு தரும், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான, Microsoft Security Essentials புரோகிராமிற்கான அப்டேட் பைல்கள் தொடர்ந்து கிடைக்கும். அதாவது, விண்டோஸ் எக்ஸ்பி இனி பாதுகாப்பு பெறும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்காது. சிஸ்டத்திற் கான பாதுகாப்பு பைல்கள் இனி அப்டேட் செய்யப்பட மாட்டாது. ஆனால்,வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் புரோகிராம் மட்டும் அவ்வப்போது எதிர்கொள்ளும் மால்வேர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் அப்டேட் செய்யப்படும்.


மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு தர்மசங்கடமான நிலையில் தான், மேலே சொல்லப்பட்ட முடிவினை எடுத்துள்ளது. ஒரு நிலையில், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விடுபட வைத்து, புதிய கூடுதல் பாதுகாப்பு கொண்ட நிலைக்கு, சிஸ்டத்திற்கு தள்ள விரும்புகிறது. இன்னொரு நிலையில், எக்ஸ்பியிலேயே தொடரும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை நட்டாற்றில் கைவிடுவது போல, சப்போர்ட் பைல்களைத் தராமல் இருந்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் செய்திடாமல் இருப்பது மட்டுமின்றி, ஆபத்தில் தள்ளிவிடும் செயல்பாட்டினையும் மேற்கொள்ளும்.

எனவே தான், மைக்ரோசாப்ட் பாதுகாப்பிற்கான பைலை மட்டும் ஜூலை 15, 2015 வரை அப்டேட் செய்வதாக அறிவித்துள்ளது. அது கூட, மால்வேர்களுக்கு எதிரான போராட்டத்தில் வலுவான எதிர்ப்பைத் தருமா என்பது அந்நிறுவத்திற்கே சந்தேகமாக உள்ளது. எனவே தான், கூடுதல் பாதுகாப்பு தரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நவீன சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து சாப்ட்வேர் புரோகிராம்களுக்கும் தொடர்ந்து செக்யூரிட்டி அப்டேட்களை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை தந்துள்ளது. கூடுதலாக, இற்றை நாள் வரை அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இனி, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.

இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. விண்டோஸ் சரித்திரத்தில், எக்ஸ்பி சிஸ்டத்தின் பங்கு, இதுவரை எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். விண்டோஸ் ஓ.எஸ்.வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.

1.விண்டோஸ் 1.0 - 1985: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அறிவிப்பு முதலில் 1983ல் வெளியானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தே விண்டோஸ் 1.0, 1985ல், வெளியானது. அதுவரை, எம்.எஸ். டாஸ் இயக்கத்தின், கட்டளைப் புள்ளியில் கட்டளைகளை அமைத்து, கம்ப்யூட்டர் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. கீழ்விரி மெனு பட்டியல், ஸ்குரோல் பார்கள், ஐகான்கள், டயலாக் பாக்ஸ்கள் முதன் முறையாக, விண்டோஸ் 1.0.ல் வெளிவந்து மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை அளித்தன. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில், மக்கள் தங்கள் கம்ப்யூட்டர் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.

2. விண்டோஸ் 3.0. - 1990: விண்டோஸ் 3 பதிப்பு 1990 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 1992ல் விண்டோஸ் 3.1 பதிப்பும் வெளியானது. இவை இரண்டும் இணைந்த உரிம விற்பனை ஒரு கோடியை எட்டியது. முதன் முறையாக 16 வண்ண கிராபிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. Solitaire, Hearts and Minesweeper ஆகிய விளையாட்டுக்கள் மக்களுக்கு உற்சாகம் தந்தன.

3. விண்டோஸ் 95, 1995: விற்பனைக்கு அறிமுகமாகி, ஐந்தே வாரங்களில், 70 லட்சம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் தான், முதல் முதலாக ஸ்டார்ட் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இணையத்திற்கான சப்போர்ட் தரப்பட்டது. டயல் அப் நெட்வொர்க்கிங் முறை அமலுக்கு வந்தது.

4. விண்டோஸ் 98, 1998: வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு வேகமாக வளர்ந்த போது, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், நுகர்வோர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதல் முறையாக, டிவிடி மற்றும் யு.எஸ்.பி.க்கள் இதில் சப்போர்ட் செய்யப்பட்டன.

5. விண்டோஸ் எம்.இ., 2000: விண்டோஸ் எம்.இ. (Windows ME (or Millenium Edition)) பலவகையான வசதிகளைக் கொண்டு வந்தது. விண்டோஸ் மூவி மேக்கர் போன்ற மல்ட்டி மீடியா சமாச்சாரங்கள் எல்லாம் இதனுடன் வந்தவையே. ஆனால், இந்த சிஸ்டத்தினை நம்பி செயல்பட முடியவில்லை. இதனால், மக்கள் இதனை ஒதுக்கினார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனைக் கைவிட்டது.

6. விண்டோஸ் எக்ஸ்பி, 2001: எங்கு விண்டோஸ் எம்.இ. தவறியதோ, அங்கு விண்டோஸ் எக்ஸ்.பி. வெற்றி கொடி நாட்டியது. பயன்படுத்த மிக மிக எளிதான சிஸ்டம் என்ற பெயரை எடுத்தது. அத்துடன், நம் நம்பிக்கையை வாரிவிடாமல், நிலையாக நின்று இயங்கியது. வெளியாகி ஐந்து ஆண்டுகளில், 40 கோடி உரிமங்கள் விற்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் பாதையில், மற்ற புதிய பதிப்புகளுடன் முன்னேறினாலும், மக்கள் எங்களுக்கு இதுவே உகந்தது என்ற முடிவுடன் தொடர்ந்து இதனையே வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இப்போதும் கூட மொத்த கம்ப்யூட்டர் பயன்பாட்டில், 30% பேர் இதனையே மிக முக்கியமாகக் கருதி இயக்கி வருகின்றனர்.

7. விண்டோஸ் விஸ்டா, 2006: விண்டோஸ் எக்ஸ்பிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பலியான சிஸ்டம் என இதனைக் கூறலாம். எக்ஸ்பிக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினால், இது மக்களிடையே எடுபடவில்லை. மேலும், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பலர், இதனால், வைரஸ்களின் தாக்கத்தினை எதிர்த்து நிற்க இயலவில்லை எனவும் குற்றம் சாட்டி னார்கள். எனவே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்களிடையே ஒரு கேலிக்குரிய பொருளாகத் தான் இருந்தது. அதனாலேயே, ஆப்பிள் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, இதற்குப் போட்டியாக, ""நான் ஒரு மேக் கம்ப்யூட்டர்'' என்று ஒரு இயக்கத்தினைத் தொடங்கி வெற்றி பெற்றது.

8. விண்டோஸ் 7, 2009: மைக்ரோசாப்ட், வெற்றி தராத விண்டோஸ் பதிப்புகளிலிருந்து பல பாடங்களைப் படித்தது. அவற்றின் அடிப்படையில் தன் தவறுகளின் பலவீனங் களை விலக்கி, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், தன் அடுத்த விண்டோஸ் பதிப் பினை, விண்டோஸ் 7 என வெளியிட்டது. மக்களுக்கான விற்பனை பதிப்பை வெளி யிடும் முன், 80 லட்சம் சோதனை உரிமங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டது. வெற்றி கரமாக இது மக்களிடையே சேர்ந்தது. மக்களும் விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சோதனை வேறு திசையில் இருந்து கிடைத்தது. மைக்ரோசாப்ட் கால் ஊன்றாத மொபைல் சாதனங்கள் இயக்கம், அதற்கு நெருக்கடியைக் கொடுத்தது. உடன், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் சரியான போட்டியைத் தந்தது.

9. விண்டோஸ் 8, 2012: தனக்கு போட்டியாக நெருக்கடி கொடுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் முதலாகக் கம்ப்யூட்டரில் தொடு உணர் திரை இயக்கத்துடன் விண்டோஸ் 8 சிஸ்டத் தினை வடிவமைத்து மைக்ரோசாப்ட் வழங் கியது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக அமைப் பினையே மாற்றி அமைத்தது மைக்ரோசாப்ட். தன்னுடைய டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கிடும் வகையில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு கலவையாகத் தரப்பட்டது. இது மிகப் பெரிய, துணிச்சலான செயல்பாடு என இத்துறையில் இயங்கும் அனைவரும், ஆச்சரி யத்துடன் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதனைப் பயன்படுத்தியவர்கள்,அதனுடன் மகிழ்ச்சியாக இல்லை.

 கம்ப்யூட்டர் வேலை களை மேற் கொள்வதில் சற்று எரிச்சல் அடைந் தனர். இது நாள் வரை பழகி வந்த அமைப்பிலிருந்து முற்றிலும் மாறான ஒன்றை ஏற்றுக் கொள்ள மனம் தடுத்தது. இதனால், இதனை அடுத்து வந்த விண்டோஸ் 8.1ல், மைக்ரோசாப்ட் வழக்கமான, தன் பாரம்பரிய டெஸ்க்டாப் முறை இயக்கத்தினையும் சேர்த்து வழங்கியது. தொடர்ந்து மெதுவாக, மக்கள் இதற்கு மாறி வந்தாலும், இது வெற்றியா? தோல்வியா? என்பதனைக் காலம் தான் தீர்மானிக்கும்.

நன்றி: இணையம் 

No comments:

Post a Comment